×

நாடாளுமன்ற குளிர்காலகூட்டத்தொடர் தொடக்கம்; முதல்நாளிலேயே எதிர்கட்சிகள் கடும் அமளி

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பேரவைத் தேர்தல் முடிவுகள் ேநற்று வெளியாகின. தெலங்கானா தவிர இதர மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்ற நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வரும் 22ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் 19 மசோதாக்கள் தாக்கலாக உள்ளன. காலை 11 மணிக்கு குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். ராகுல் வரவில்லை.

நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவியைப் பறிக்க பரிந்துரைக்கும் மக்களவை நெறிமுறைகள் குழுவின் அறிக்கை, மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்படுவதாக பட்டியலிடப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதே சமயம் மஹுவா நேற்று நாடாளுமன்றம் வந்திருந்தார். ஆளும் பாஜக அரசை விமர்சித்து எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நண்பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது ஆளும்கட்சியினர் 3 மாநில தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் மோடியை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள். பிற்பகல் அவை கூடிய போது இதுபற்றி மஹுவா மற்றும் காங்கிரஸ் எம்பி சுரேஷ், ஆர்எஸ்பி எம்பி பிரேமசந்திரன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். ஆனால் அரசு தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. அதே போல் பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி தன்னை தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ எம்பி ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பேனரை கட்டிக்கொண்டு வந்தார். அதனால் அவையில் சர்ச்சை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பிற்பகலில் சட்டத் தொழிலை ஒரே சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. குளிர்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா இதுவாகும்.

எம்எஸ்.சுவாமிநாதன், எம்எஸ்.கில் மறைவுக்கு இரங்கல்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில், பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மூன்று முன்னாள் எம்.பி.க்கள் லலித்பாய் மேத்தா, பசந்தி சர்மா மற்றும் டிபி சந்திரே கவுடா ஆகியோர் காலமானதை குறிப்பிட்டு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா இடைநீக்கம் ரத்து
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆம்ஆத்மி எம்பி ராகவ் சதா ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்யும் போது வேறு எம்பிக்களின் கையெழுத்துக்கள் இடம் பெற்றன. இதுபற்றி அவர்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் ராகவ் சதா எம்பி காலவரையின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் அவர் அவை நடவடிக்கையில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று அவரது இடைநீக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்மானம் பாஜ உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தாக்கல் செய்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் அவையில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

15 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களில் நிலத்தடி நீர் சட்டம் அமல்

ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய நிலத்தடி நீர் சட்ட மாதிரி மசோதாவை 15 மாநிலங்களும், ஆறு யூனியன் பிரதேசங்களும் அமல்படுத்தியுள்ளதாக ஒன்றிய ஜல் சக்தி இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு மாநிலங்களவையில் தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், கோவா, அரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்பட 15 மாநிலங்களில் நிலத்தடி நீர் தொடர்பான சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 6 யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க தீவிர நடவடிக்கை
ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் தெரிவிக்கப்பட்டதில்,\\” ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தடை செய்யப்பட்டது. இதனை மீறும் நபர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற வகை பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் மறுசுழற்சி செய்வது தொடர்பாக ஏற்கனவே உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு பொருட்களின் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு பாதகம் ஏற்படாத நார் இலை, துணி போன்ற பல்வேறு பொருட்களைக் கொண்டு மாற்று யோசனைகளும் முன்வைக்கப்பட்டு வரப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும்
மாநிலங்களவையில் நேற்று பேசிய திமுக எம்பி பி.வில்சன்,’அனைத்து மதங்களின் பழக்கவழக்கங்களையும் ஒழித்து மதச்சார்பின்மையைக் கொல்ல ஒன்றிய அரசு நினைக்கிறது. பேரறிஞர் அண்ணா அறிமுகப்படுத்திய தாலி, மங்களசூத்திரம், சீத்திருத்த சுயமரியாதை திருமணங்கள் ஆகிய அனைத்தும் இந்த பொது சிவில் சட்டத்தால் அழிக்கப்படும் சூழல் உருவாகும். மேலும் 21வது சட்ட ஆணையம் இரண்டு வருட ஆலோசனைக்குப் பிறகு பொது சிவில் சட்டம் தேவையில்லை என்று பரிந்துரை செய்தது. குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிரான இந்த பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்’ என தெரிவித்தார்.

The post நாடாளுமன்ற குளிர்காலகூட்டத்தொடர் தொடக்கம்; முதல்நாளிலேயே எதிர்கட்சிகள் கடும் அமளி appeared first on Dinakaran.

Tags : parliamentary ,New Delhi ,Chhattisgarh, Madhya Pradesh ,Parliamentary Winter Session ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...